கேரள வரலாறு
கேரள வரலாறு
பண்டைய காலம் முதல் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த கேரளம், கி.பி. 250க்குப் பின்னர் கேரளப் பகுதியில் நடைபெற்ற பிராமணக் குடியேற்றங்களின் காரணமாக பழந்தமிழகத்திலிருந்து பிரிந்து ஒரு தனிச் சமூகமாக உருவாகியது. கேரளாவின் பண்டைய சங்ககாலகட்ட வரலாறும், அது ஒரு புதிய சமூகமாக உருவான வரலாறும், அதன் பிந்தைய கி.பி. 1500 வரையான வரலாறும், பண்டைய சங்க இலக்கியங்கள், பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத்தரவுகள், கேரளா குறித்த உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களின் நூல்கள் ஆகிய பல்வேறு தரவுகளைக்கொண்டு விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளது.
கி.மு. 750-50 வரையான இன்றைய தமிழ்நாடும் கேரளாவும் சேர்ந்த பழந்தமிழகத்தின் தொழில்நுட்பம், வணிகம், வேளாண்மை, இசை, தத்துவம் போன்ற பல விடயங்களை இந்நூல் பேசுகிறது. மேலும் பழந்தமிழ்ச் சமூகம் என்பது வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக் கொண்டதாகவும், அன்றைய காலகட்ட மகதப்பேரரசை விட பல்வேறு துறைகளிலும் ஒரு உன்னதமான உயர்தரமான வளர்ச்சியைப் பெற்றதாகவும், உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்தது என்பதையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
சங்ககாலத்துக்குப் பிந்தைய, சங்கம் மருவிய காலம் (கி.மு.50-கி.பி.250) குறித்தும், அதன் பிந்தைய களப்பிரர் காலம் குறித்தும் இந்நூல் சுருக்கமாகப் பேசுகிறது. களப்பிரர்காலம் முதல் கேரளாவில் நடைபெற்ற பிராமணக் குடியேற்றங்களின் விளைவாக, கேரளச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்நூல் உரையாடுகிறது. பின் சுமார் கி.பி. 800-1200 வரையான சேரர் பெருமாள் ஆட்சி குறித்தும் அதன் பிந்தைய கி.பி. 1200-1500 வரையான கேரளக் குறுநில அரசுகளின் ஆட்சி குறித்தும் அவ்வாட்சிக் காலத்தில் ஏற்பட்ட பேரளவான வளர்ச்சி குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. சங்ககாலம் குறித்த இராசன் குருக்கள், இராகவவேரியர் ஆகியவர்களின் கருத்தை மறுத்துரைத்துள்ளது.
இறுதியாக, கி.மு. 1000 முதல் கி.பி. 1500 வரையான ஐரோப்பியர் வருகைக்கு முந்தைய 2500 ஆண்டுகால, நவீனக் கேரளச்சமூகம் குறித்த ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை இந்நூல் வழங்கவல்லது.
கேரள வரலாறு - Product Reviews
No reviews available

