ஏழாம் சுவை - கு.சிவராமன்

ஏழாம் சுவை - கு.சிவராமன்
‘‘கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது? கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல! பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.