விகடன் மேடை

விகடன் மேடை
தலைசிறந்த மனிதர்களை மேடையேற்றிப் பாராட்டி அழகு பார்ப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு. திரைத் துறை, அரசியல், சமூகம், எழுத்து, சேவை... என ஒவ்வொரு தளத்திலும் உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு மேடையேற்றிய பகுதிதான் ஆனந்த விகடனில் வெளிவந்த ‘விகடன் மேடை’. வாசகர்களின் ‘நச்’ கேள்விகளுக்கு, பிரபலங்களின் ‘பளிச்’ பதில்கள் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியது. சினிமா பிரபலங்களை, அரசியல் சாணக்கியர்களை, சமூகப் போராளிகளை, எழுத்துலக ஜாம்பவான்களை எமது வாசகர்களோடு இணைத்த பாலம் ‘விகடன் மேடை’ என்றால் அது மிகையாகாது. கடுமையான பணிகளுக்கு இடையிலும் வாசகர்களின் சரவெடி கேள்விகளுக்கு நிதானத்தோடு, பகட்டின்றி பதில் அளித்த அனைத்துப் பிரபலங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்வதில் கடமைப்பட்டுள்ளோம். திரைப் பிரபலங்கள் கடந்து வந்த பாதை எவ்வளவு சிரத்தைக்கொண்டது என்பதை அழுத்தந்திருத்தமாகவும் நேர்மையாகவும் பதிவுசெய்துள்ளார்கள். ‘‘நேர்மையாகச் செயல்படுவதால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?” என ‘விகடன் மேடை’யில் வாசகி ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர், ‘‘20 ஆண்டு காலப் பணியில் 18 முறை மாறுதல். குழந்தைகளின் கல்வி பாதிப்பு. சக ஊழியர்களின் வெறுப்பு. ‘பிழைக்கத் தெரிந்தவர்’களின் பரிகாசம். நண்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவது. சின்னச் சின்ன அவமானங்கள். தனிமைப்படுத்தப்படுதல். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி மக்களிடம் பெற்றிருக்கக்கூடிய நம்பிக்கை. அது கொடுக்கும் ஆத்ம திருப்தி. குறைவாக இருந்தாலும் லட்சிய தாகம் உள்ள நண்பர்கள். அதைக் காட்டிலும், தமிழ் மக்களின் அளப்பரிய நம்பிக்கையைப் பெற்ற ஆனந்த விகடனில் லட்சக்கணக்கான வாசகர்களுடன் அளவளாவும் வாய்ப்பு. இவையே, நான் நேர்மையாக இருந்ததால் பெற்றவை. இழந்தது எனப் பார்த்தால், கடினமான சில சூழல்களில் நிம்மதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!” என்று பதில் அளித்திருந்தார். எத்தனை அரசு அதிகாரிகளிடம் இருந்து இதுபோன்ற ஒரு நேர்மையை எதிர்பார்க்க முடியும்? ‘விகடன் மேடை’யில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அதுதான் உங்கள் கைகளில் தற்போது தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஆளுமைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகள், சந்தித்த வெற்றி&தோல்விகள், தனிப்பட்ட விருப்பு& வெறுப்புகள்.... போன்றவற்றைக் காண அவர்களின் பிரத்யேக பக்கங்களைப் புரட்டத் தயாராகுங்கள்!