பதி பசு பாகிஸ்தான்

பதி பசு பாகிஸ்தான்
மக்கள் மறந்துவிடுகின்ற நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைப்பதுதான் வரலாற்றாசிரியரின் பணி என்றார் உலகப் புகழ்பெற்ற மார்க்ஸிய வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம். அந்த மூதுரைக்கேற்ப, தமிழகத்தில் இந்துத்துவம் வேரூன்றுவதற்கு உதவி செய்த அரசியல் சக்திகள். இந்துத்துவத்தின் முகவர்களாகச் செயல்பட்ட கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அதிகார வர்கத்தினர். ‘ஆன்மீகவாதிகள்’. தங்கள் ஆழ்மனதில் இந்துத்துவ உணர்வைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், மத வாத காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன இந்தத் தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள். 1990-2002 ஆம் ஆண்டுக் காலத்தியப் பதிவுகள் என்றாலும், தமிழகத்தில் இந்துத்துவச் சக்திகள் வலுப்பெறுவதற்கு உறுதுணையாக இருந்த, இருக்கின்ற சக்திகளை அடையாளப்படுத்தி அவற்றைத் தனிமைப்படுத்தப் பயன்படுகின்றவை. சமூகப் புரட்சிக்காக அம்பேத்கரும் பெரியாரும் வழங்கியுள்ள பங்களிப்புகள் நேரடியாகவும் கருத்துப் போராட்ட வடிவத்திலும் கட்டுரைகளாக வெளிப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரிதும் அறியப்படாத அறிவியலாளரும் புரட்சிகரச் சிந்தனையாளருமான மேக்நாத் சாஹாவும், பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் தங்கள் முத்திரையைப் பதித்த தமிழர்களும் நமக்கு அறிமுகமாகின்றனர்.