தனிமையின் நூறு ஆண்டுகள்

0 reviews  

Author: காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  550.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தனிமையின் நூறு ஆண்டுகள்

ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உறக்கமின்மைக் கொள்ளை நோயும் உள்நாட்டுப் போர்களும் பழிவாங்கல்களும் அந்த நகரத்தின் வரலாற்றை உருவாக்குகின்றன. உலகின் மிகப் பெரிய வைரம் என்று ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவால் வர்ணிக்கப்படும் பனிக்கட்டியைப்போல மகோந்தா நகரமும் காலத்தின் வெம்மையில் கரைந்து மறைகிறது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஸ்பானிய மொழி நவீன இலக்கியத்துக்கு வழங்கிய கலைக் கொடை கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் பார்வையிலும் புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. அவரது வருகைக்குப் பின்பு அவரின் எழுத்து வகையால் தூண்டுதல் பெறாத இலக்கியப் போக்கும் பாதிக்கப்படாத எழுத்தாளர்களும் எந்த மொழியிலும் இல்லை. அவரது மாய எதார்த்தத்தால் வசீகரிக்கப்படாத இலக்கிய வாசகரும் எந்த மொழியிலும் எந்தப் பிரதேசத்திலும் இல்லை. அவரைவிட ஆழமான எழுத்தாளர்களும் அவரைவிட சுவாரசியமான கதைசொல்லிகளும் இருக்கலாம். ஆனால் இலக்கியச் செறிவையும் வெகுவான வாசகப் பரப்பையும் ஒரே சமயத்தில் வசப்படுத்திக் கொண்டதில் மார்க்கேஸுக்கு நிகரானவர்கள் இல்லை. ஷேக்ஸ்பியர், தால்ஸ்தோய், செர்வாண்டிஸ், விக்டர் ஹியூகோ ஆகியோரின் வரிசையில் நவீன உலகம் கண்ட பெருங்கலைஞர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.

தனிமையின் நூறு ஆண்டுகள் - Product Reviews


No reviews available