மாறாது என்று எதுவுமில்லை

மாறாது என்று எதுவுமில்லை
காலச்சுவடு இதழில் வெளியான நேர்காணலுக்குக் கிடைத்த வரவேற்புக்குக் காரணம் வில்சன் பேசிய விஷயங்கள். கையால் மலம் அள்ளும் முறையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுத் தொழிலாளர் வாழ்வுக்காகவும் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவர் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அரசோடு நடத்திய சட்டப் போராட்டங்கள் பல. எனினும் அவையெல்லாம் போதுமான அளவு பொதுத்தளத்திற்கு வந்து சேரவில்லை என்பதையே இந்நேர்காணலுக்குக் கிடைத்த வரவேற்பு உணர்த்தியது. இதுவரைக்கும் நாம் யோசிக்காத தர்க்கங்கள், புதுப்புதுக் கோணங்களை அவர் முன்வைக்கிறார். துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்பாகப் பொதுமனதில் குற்ற உணர்வை இது உருவாக்கியது.
இதழில் வந்த நேர்காணலுக்குப் பிறகு பேசிய பலவும் முக்கியமானவை. அவரது அரசியல், சமூகப் பார்வைகளைப் பேசியுள்ளார். தம் தனிப்பட்ட வாழ்வு குறித்துப் பேசியிருக்கிறார். எவ்வளவோ இருக்கின்றன. அவர் பேசியவை நமக்கு அறிவூட்டுகின்றன; புதுவெளிச்சத்தைக் கொடுக்கின்றன; மனசாட்சியை உலுக்குகின்றன. கழிவகற்றும் தொழிலுக்குப் பின்னால் செயல்படும் சாதிய மனோபாவத்தை வெளிப்படையாகவும் நுட்பமாகவும் எடுத்துக் காட்டுகிறார். பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். எல்லோரது பொறுப்புணர்வையும் சுட்டிக் காட்டுகிறார். ‘மாறாது என்று எதுவுமில்லை’ என்கிறார் வில்சன். இதை வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் குறைந்தபட்ச மாற்றமாவது உருவாகும் என்பது என் நம்பிக்கை. இதை நூலாக்கம் செய்வதற்கு இந்த நம்பிக்கையே காரணம்.